நாம் தமிழ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மே17 இயத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்:
“நாம் தமிழர் என்ற பெயரில் கட்சி நடத்தியவர் தன் சொந்த சாதியை சேர்ந்தவர் என்கிற காரணத்தினால் அந்தப் பெயரையே சீமான் தேர்ந்தெடுத்தார். அக்கட்சியின் தலைவராக மாற இந்த பின்னணியே காரணமானது. விடுதலை புலிகளின் கொடியை, உறுதிமொழியை, சால்வை வடிவத்தை, வாசகங்களை, வரலாறை களவாடியது போல, விடுதலை புலிகள் இயக்கத்தின் பெயரிலேயே கட்சி ஆரம்பிக்காமல் கவனமாக தவிர்த்ததற்கு காரணம் வேறென்னவாக இருக்க முடியும்?
விடுதலை தமிழ்ப்புலிகள், தமிழ்ப்புலிகள் என பல அமைப்புகள் விடுதலை புலிகள் அமைப்பின் மீதான ஈர்ப்பில் தம் கட்சிகளுக்கு பெயர் வைத்து போரட்ட குணத்துடன் இயங்கும் போது 'முனியாண்டி விலாஸ்' கதை சொல்லிக்கு ஏன் விடுதலை புலிகள் இயக்க பெயரை ஒத்ததாக ஒரு பெயரை கூட வைக்க தோன்றவில்லை? குறைந்தபட்சம் அவரது வீழ்ந்துவிடாத வீரத்தை சுட்டிக்காட்டுமளவில், '*** பூனைகள்' என்றாவது பெயர் வைத்திருக்கலாம்.
பெரியாரின் போராட்ட வரலாறு தெரியாதவருக்கு சொல்லிக்கொடுக்கலாம், புரியாதவருக்கு விளங்க வைக்கலாம், கல்லாதவருக்கு கற்பிக்கலாம். ஆனால், கங்காணிகளுக்கு பாடமெடுக்க இயலாது.” என்று பதிவிட்டுள்ளார்.