ஆளுநர் ஆர்.என். ரவி 
தமிழ் நாடு

சனாதன தர்மத்தில் சாதி பாகுபாடு கிடையாது! - ஆளுநர் ரவி

Staff Writer

‘சனாதன தர்மத்தில் சாதி பாகுபாடு கிடையாது. அனைத்து மக்களும் ஒரே குடும்பம் என்று கருதுவதுதான் சனாதன தர்மம்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

ஆளுநர் மாளிகை சார்பில் வள்ளலாரின் 202ஆவது வருவிக்கவுற்ற பெருவிழா மற்றும் திருவருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், அருட்பா பதிப்பகத்தின் திருவருட்பா உரைநூல் தொகுப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, முதல் பிரதியை பாலகிருஷ்ணன் தம்பையா பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

“எப்போதெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் தெய்வம் மனிதனாக அவதரித்து நிலைமையை சரிசெய்கிறது என்பதுதான் நமது நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் நம் நாடு மிகவும் கடினமான சூழலில் இருந்துபோது அவதரித்த தெய்வம்தான் வள்ளலார்.

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் ஞானத்தால் வெளிப்படுத்தியவர்கள் ரிஷிகள். இந்த உண்மையை வெவ்வேறு மொழி பேசிய, வெவ்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்ட, வெவ்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றிய மக்கள் உணர்ந்துகொண்டனர். இந்த உண்மையில் இருந்து தோன்றியதுதான் பாரதம்.

இவ்வாறுதான் பாரத நாடு உருவானது. யாரும் யாரை விடவும் உயர்ந்தவர்கள் இல்லை. அதேபோல், யாரும் யாரை விடவும் தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் சமம் என்று பழமையான வேதமான ரிக் வேதம் கூறுகிறது.

அனைவரும் ஒன்று என்பதுதான் பாரத தர்மம். இதைத்தான் சனாதன தர்மம் என்று சொல்கிறோம். ஆனால், சிலர் சனாதன தர்மம் என்பது சாதி பாகுபாடு என்று கூற முயற்சிக்கிறார்கள். ஆனால், உண்மையில் சனாதன தர்மம் என்பது சாதி பார்ப்பது அல்ல. யாராவது சாதி பாகுபாடு பார்த்தால் அது சனாதன தர்மம் அல்ல.

சனாதன தர்மம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. அனைவரும் ஒரே குடும்பம் என்று வலியுறுத்துவது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் அனைத்தும் ஒரே குடும்பம் என்றுகருதுவதுதான் சனாதர்ம தர்மம். சனாதன தர்மம் எந்த பாகுபாட்டையும் ஏற்றுக்கொள்ளாது. தீண்டாமையும் சாதி பாகுபாடும் பார்ப்பது சனாதன தர்மம் அல்ல.” இவ்வாறு ஆளுநர் பேசினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram