மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கும் ஆதினங்கள் 
தமிழ் நாடு

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக தொடங்கியது!

Staff Writer

பழநியில் இந்து அறநிலையத்துறை சார்பில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று கோலாகலமாக தொடங்கியது. இன்றும், நாளையும் பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் இந்த மாநாடு நடக்கிறது.

இன்று காலை குத்துவிளக்கு ஏற்றுதலுடன் அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி, எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ. செந்தில் குமார் முன்னிலையில் மாநாடு தொடங்கியது. மாநாட்டு நுழைவாயிலை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

தொடர்ந்து 100 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கொடிக்கம்பத்தில், சேவல், மயில், வேல் உடன் கூடிய முருகப்பெருமான் கொடியேற்றி வைத்து, மாநாடு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

மாநாட்டில் சொற்பொழிவு அரங்கம், ஆய்வரங்கம், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், புகைப்படக் கண்காட்சி, 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சி அரங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் நடக்கும் ஐந்து ஆய்வரங்கங்களில் வெளிநாட்டினர் உட்பட 1300 பேர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். நீதிபதிகள், ஆதினங்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முருகன் கோவில் குறித்த 8 அலங்கார வளைவுகள், மலைக்கோயில் முகப்புடன் ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுடன் கூடிய மருத்துவ முகாம்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல சக்கரநாற்காலிகள் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பங்கேற்க வருவோருக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள், மாணவர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர். 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டிற்கு வருவோருக்கு பஞ்சாமிர்தத்துடன் கூடிய பிரசாத பை வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது.

மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி இலவசம். பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் மாநாட்டில் சிரமமின்றி பங்கேற்பதற்கு ஏற்ற வகையில் அறநிலையத்துறையினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram