தமிழ்ப் புதல்வன் திட்டம் 
தமிழ் நாடு

3 இலட்சம் ஆண் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000... தமிழ்ப் புதல்வன் திட்டம்!

Staff Writer

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஆண் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டமாக தமிழ்ப் புதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதுகுறித்த நிதிநிலை அறிக்கை அறிவிப்பு:

”உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் 'தமிழ்ப் புதல்வன்' எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள் பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள் இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று இலட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர். உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.”