எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

செயற்கை போதைப்பொருட்களின் புகலிடமாக மாறிய தமிழ்நாடு– பழனிசாமி குற்றச்சாட்டு!

Staff Writer

தமிழ்நாடு செயற்கை போதைப்பொருட்களின் புகலிடமாக மாறி இருப்பதற்கு தி.மு.க. அரசே காரணம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

”சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன், எம்.டி.எம்.ஏ. ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்துவந்தும், இந்த விடியா அரசு அதனைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தி.மு.க. அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர், சர்வதேச போதைப்பொருள் மாபியாவாக இருந்த செய்தியே வந்துசேர்ந்தது.

தற்போது, செயற்கை போதைப்பொருட்களைக் கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழ்நாட்டைப் போதைப்பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த அரசே காரணியாக உள்ளது.

செயற்கை போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாக முதலமைச்சர் செயல்படவேண்டும்.” என்று பழனிசாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.