அரங்க. இராமலிங்க, சண்முகசுந்தரம் 
தமிழ் நாடு

9 பேருக்கு தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது!

Staff Writer

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான தமிழக அரசின் இலக்கிய மாமணி விருதுகளை தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

“பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும். தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. அவ்வகையில் மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.

இலக்கிய மாமணி விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை அளித்தும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்யப்பெறுவார்கள். இலக்கிய மாமணி விருது 2022ஆம் ஆண்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரங்க. இராமலிங்கத்துக்கு மரபுத்தமிழ் விருதும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொ.மா.கோதண்டத்துக்கு ஆய்வுத்தமிழ் விருதும், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யகாந்தன் என்கிற மருதாச்சலத்துக்கு படைப்புத்தமிழ் விருதும் அளிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி அர்ஜீணனுக்கு மரபுத்தமிழ் விருதும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர. திருவிடத்துக்கு ஆய்வுத்தமிழ் விருதும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த க. பூரணச்சந்திரனுக்கு படைப்புத்தமிழ் விருதும் அளிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2023ஆம் ஆண்டிற்கு இலக்கிய மாமணி விருதிற்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா. மாணிக்கவாசகனுக்கு மரபுத்தமிழ் விருதும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரத்துக்கு ஆய்வுத்தமிழ் தமிழ் விருதும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசனுக்கு படைப்புத்தமிழ் விருதும் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.” என்று தமிழ் வளர்ச்சித் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.