அவசரச் சிகிச்சை வரம்பு 
தமிழ் நாடு

அவசரச் சிகிச்சைக்கான வரம்பு ரூ. 2 லட்சமாக அதிகரிப்பு!

Staff Writer

இலவச அவசரச் சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வு துறை சார்ந்த நிதிநிலை அறிவிப்பு விவரம்:

”இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 50 படுக்கைகள் கொண்ட 6 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 142 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். அதேபோல், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டப்படும். மேலும், 87 கோடி ரூபாயில் 25 வட்டம் மற்றும் வட்டம்சாரா மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் 64 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

மேலும், 25 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு போதைப் பழக்க மீட்பு மையங்கள் 20 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.