ரேசன் கடை 
தமிழ் நாடு

சென்னையில் 19ஆம் தேதி ரேசன் கார்டு குறைதீர்ப்பு முகாம்!

Staff Writer

சென்னையில் உள்ள 19 உணவுப்பொருள் வழங்கல் மண்டலங்களில் வரும் 19ஆம் தேதி அன்று பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம் நடத்தப்படுகிறது. 

பொது விநியோகத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. தேர்தலையொட்டி இந்தக் கூட்டம் இடையில் நிறுத்திவைக்கப்பட்டது.

மீண்டும் தொடர்ந்து நடத்தப்படும் நிலையில், சென்னையில் அக்டோபர் மாதத்திற்கான குறைதீர் முகாம், உணவுப் பொருள் வழங்கல் - நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 19ஆம் தேதி காலை10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தப்படுகிறது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உட்பட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் இதில்  மேற்கொள்ளப்படும்.

ரேசன் கடைகளில் பொருள் பெற நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் உட்பட்டோருக்கு அங்கீகாரச் சான்றும் வழங்கப்படும்.

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்க்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram