உச்சநீதிமன்றம் 
தமிழ் நாடு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: அரசாணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Staff Writer

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஓராண்டு பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக உள்ள வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கின் இன்றைய விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, எதன் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, 'பயிற்சி பெற்றுள்ள அர்ச்சகர்கள் ஆகம விதிகளைப் படித்தவர்கள். இவர்கள்தான் நியமனம் செய்யப்படுகிறார்கள். மேலும் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய அரசு சார்பில் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படுகிறது' என்று தமிழக அரசு கூறியது.

இன்றைய விசாரணை முடிவில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

மேலும், இது தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும் என்று கூறி இந்த வழக்கு ஜனவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.