துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
தமிழ் நாடு

துணைமுதல்வர் உதயநிதிக்கு புதியதாகச் செயலாளர் நியமனம்! வேறு மாற்றங்கள் என்னென்ன?

Staff Writer

சில நாள்களுக்கு முன்னர் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் தலைமைச்செயலாளர் நிலையில் உள்ள உயர்கல்விச் செயலாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் புதிய செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக கால்நடைப் பராமரிப்பு, மீன்வளத் துறைச் செயலாளர் கே. கோபால் உயர்கல்விக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பொறுப்பை தற்காலிகமாக தேர்தல் துறை செயலாளர் சத்யபிரதா சாகு கூடுதலாக கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியத்தின் தலைவராக உள்ள கூடுதல் தலைமைச்செயலாளர் நிலையில் உள்ள ராஜேஷ் லக்கானி, வருவாய் நிருவாகத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அரசு முதன்மைச் செயலாளர் நிலைக்கு அடுத்த அரசுச்செயலர் நிலையில் உள்ள மனிதவளத் துறைச் செயலர் நந்தக்குமார், மின்வாரியத்துக்குத் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார்.

ஜவுளி, கைத்தறித் துறைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சிட்கோ தலைவராக சுவர்ணாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியிலிருந்து சுவர்ணா கல்வித் துறையின் ஆர்யுஎஸ்ஏ திட்டத்தின் மாநிலத் திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

தலைமைச்செயலாளர் முருகானந்தம் இதற்கான ஆணையை இன்று வெளியிட்டுள்ளார்.