பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தில் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் 
தமிழ் நாடு

பெரம்பலூர் குவாரி ஏலம்: தி.மு.க.வினர் 13 பேர் கைது!

Staff Writer

பெரம்பலூரில் கல்குவாரி ஏலத்தில் அரசு அதிகாரிகளையும் பா.ஜ.க.வினரையும் தாக்கிய தி.மு.க.வினர் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல் குவாரிகளுக்கான ஏலத்துக்கு விண்ணப்பிக்க வந்த பா.ஜ.க. தொழில் துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவரும், கவுள்பாளையம் ஊராட்சித் தலைவருமான செ.கலைச்செல்வன், அவரது சகோதரர் முருகேசன், பா.ஜ.க. தொழில் துறை பிரிவு மாவட்டத்தலைவர் பி.முருகேசன் ஆகியோரை தி.மு.க.வினர் தாக்கினர்.

மேலும், டி.எஸ்.பி. பழனிசாமி உள்ளிட்ட போலீஸார், உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் அலுவலர் குமரிஅனந்தன் உள்ளிட்டோரையும் தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட புவியியல் - சுரங்கத் துறை துணை இயக்குநர் ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்டதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோ கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், அரசு அதிகாரிகளையும் பா.ஜ.க.வினரையும் தாக்கியதாக 13 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், எம்.எல்.ஏ. பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, கல் குவாரி ஏலத்தில் கலந்துகொள்வதற்காக விண்ணப்பிக்கச் சென்ற தங்களை, புவியியல் சுரங்கத் துறை அதிகாரிகளும், பா.ஜ.க.வினரும் தாக்கியதாக எம்.எல்.ஏ. பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.