தமிழ் நாடு

விப்பாங்களா… மாட்டாங்களா…? முடிவுக்கு வந்த சந்தேகம்!

Staff Writer

ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்யத் திட்டமில்லை என விளக்கமளித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், வீடுகளுக்கே சென்று மதுவிற்பனை செய்ய திட்டமில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மதுவிலக்கு கோரிக்கை, குறைந்த விலையில் மதுவிற்பனை போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மது வகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட சமூக ஊடக பதிவில்,

‘தமிழகத்தில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மது வகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மது வகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் விநியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா?. வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

வீடுகளுக்கே மதுவை நேரடியாக கொண்டு விநியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

போதை குறைந்த மது வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்பட்டால், அது வீடுகளில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும் சுவைத்துப் பார்க்கத் தூண்டும். காலப்போக்கில் வீட்டில் உள்ள பெண்களையும், பிள்ளைகளையும் மதுவுக்கு அடிமையாக்கவே இந்த வழக்கம் வழிகோலும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கவே வீடு தேடு மதுவை கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் வழிவகுக்கும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது. மது வகைகளை ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும்.’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

’ஆன்லைன் மூலம் மதுவை விற்பனை செய்வது உள்ளிட்ட எந்த புது முயற்சியிலும் இறங்க டாஸ்மாக் நிர்வாகத்திடம் திட்டம் இல்லை.

டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்படவில்லை’ என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram