வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நாதக நிர்வாகி பாலசுப்பிரமணியன் 
தமிழ் நாடு

அமைச்சரின் வீட்டருகே நா.த.க. நிர்வாகி வெட்டிக் கொலை!

Staff Writer

தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதம் நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் சேலம் அதிமுக நிர்வாகி சண்முகம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பி.எஸ்.பி. மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் வீட்டருகே வல்லபாய் சாலை பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் காவல் துறையினர் பாலசுப்பிரமணியன் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலசுப்பிரமணியன் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram