மாணவர்களைத் தவறாக வழிநடத்தியது தொடர்பாக பேராசிரியர் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளைத் தவறான வழியில் செல்ல வழிகாட்டியதாக 2018 ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
அவருடன் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் அவர்கள் இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்தார். நிர்மலா தேவிக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, அவர் அளித்த தீர்ப்பில் இன்று நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2.42 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிர்மலாதேவி சிறையில் இருந்த காலத்தைத் தவிர்த்து மீதி காலத்தை அவர் தண்டனையாகக் கழிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.