அமைச்சர் செந்தில் பாலாஜி - அசோக் குமார் 
தமிழ் நாடு

செந்தில் பாலாஜியின் தம்பி கைது- சுற்றிவளைத்த அமலாக்கத் துறை!

Staff Writer

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் அமலாக்கத்துறையினரால் இன்று கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் மீதும் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதைத் தொடர்ந்து அசோக் குமார் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது. கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக் குமாரை அமலாக்கத் துறை கைது செய்தது. கொச்சியில் கைது செய்யப்பட்ட அசோக் குமாரை இன்று மாலை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது. அவரை நாளை காலையில் அமலாக்கத் துறையினர் கொண்டுவந்து நீதிமன்றத்தில் நிறுத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.