மகளிர் உரிமைத் தொகை 
தமிழ் நாடு

மகளிர் உரிமைத் தொகை : இடம் பெறாதவர்கள் என்ன செய்யலாம்?- புதிய அறிவிப்பு

Staff Writer

மகளிர் உரிமைத் திட்டத்தில் இடம்பெறாமல் போனவர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைச் செயலாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம்:

“ கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்திசெய்யாத விண்ணப்பங்களும் தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை.

விண்ணப்பதாரர்களின்  விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி, விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் இ-சேவை மையம் வழியாக கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாள்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையைப் பெற்று விசாரணை செய்வார்.

இந்த மேல்முறையீட்டு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.

பயனாளிகளின் தகுதி, தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராக கோட்டாட்சியர் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள், மேல்முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.