தமிழ் நாடு

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு: தார் கார் வென்ற அபிசித்தர்!

Staff Writer

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் பத்து காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற அபிசித்தருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் மஹிந்திராவின் தார் கார் பரிசாக வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் ரூ. 62.78 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இந்த புதிய அரங்கில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில், 478 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர், 10 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார்.

விளாங்குடியைச் சேர்ந்த பரத்குமார், சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி, இரண்டாவது இடம் பெற்றனர்.

அதிகமான காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற அபிசித்தருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் கார், ரூபாய் 1 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேஷ் கருப்பையா என்பவரது காளை சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டு, பரிசாக கார் வழங்கப்பட்டது.