அமைச்சர் உதயநிதி 
தமிழ் நாடு

மதுரை எய்ம்ஸ்: மத்திய அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - அமைச்சர் உதயநிதி

Staff Writer

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை தாமதப்படுத்தும் மத்திய அரசுக்கு தமிழக மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் தளப் பக்கத்தில், “மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசு ஒற்றைச் செங்கல்லை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையைக் கட்டிமுடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?” என்று கேட்டுள்ளார்.

மேலும், ”எய்ம்ஸ் கட்டுமானப் பணியைத் தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.” என்றும் உதயநிதி கூறியுள்ளார்.