(இடமிருந்து வலம்) அரவிந்த் மேனன், எல். முருகன், சரத்குமார், ராதிகா, எச். ராஜா 
தமிழ் நாடு

பா.ஜ.க.வுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி- 2 கட்டப் பேச்சு முடிந்தது!

Staff Writer

வருகின்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

"பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பிப்ரவரி 28ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து, மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைப்பது குறித்து முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று (05.03.2024) மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா, பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் அரவிந்த்மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தேறியது.” என்று தெரிவித்துள்ளார்.

”நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்." என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், நேற்று தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சரத்குமார் இன்று பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.