தமிழ் நாடு

இபிஎஸ் முதலமைச்சராக வேண்டும்: மண் சோறு சாப்பிட்ட அதிமுகவினர்!

Staff Writer

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு திரண்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பூங்கொத்துகள் கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, அவர் சேலம் மாவட்ட அதிமுகவினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 69 கிலோ கேக்கினையும், நிர்வாகிகள் கொண்டு வந்திருந்த 200 கிலோ அளவிலான கேக்குகளையும் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். அதன்பிறகு அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 125 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சீருடை, புடவை மற்றும் இனிப்புகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கொல்கத்தா காளி பாரி கோயிலில் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, மண் சோறு சாப்பிட்டு வழிபட்டார். இதில், அதிமுக-வினர் 69 பேர் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என வேண்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டனர்.