மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு 
தமிழ் நாடு

தமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கு: குற்றவாளிகள் அனைவரும் விடுதலை!

Staff Writer

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 'குற்றவாளிகள்' அனைவரும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலப் பிரச்சினை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றவாளிகள் அனைவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ்,சுந்தர் மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டது எனக் கூறி, மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் என 9 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும் 9 பேரும் வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.