மதுரை அதிமுக மாநாட்டின் முகப்பு பகுதி 
தமிழ் நாடு

‘மதுரைக்கு வராதே, திரும்பிப் போ’ - எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்கள்!

Staff Writer

மதுரை அதிமுக மாநாட்டுக்குத் தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மதுரை முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த சேது முத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.

அந்த மனுவில், "மதுரை பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிரில் ஆக. 20இல் அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் மிக அருகில் உள்ளது. தினசரி அதிக அளவில் விமானங்கள் வந்துசெல்கின்றன. மதுரை விமான நிலையம் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் உள்ளது. அ.தி.மு.க. மாநாட்டுக்கு சுமார் 15 லட்சம் பேர் வருவதாக கட்சியினர் கூறி வருகின்றனர். இதனால் மாநாடு நடைபெறும் நாளில் விமானம் தரையிறங்கும்போது இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.” என்றும்,

”மாநாட்டில் பங்கேற்போர் பட்டாசு, வாண வேடிக்கை வெடிக்கும்போது அசம்பாவிதம் நடைபெற்றால் பெரும் பாதிப்பு ஏற்படும். இப்பகுதி பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக விமான போக்குவரத்துத் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.” என்றும்,

”விமான நிலையத்தைச் சுற்றி 20 கி.மீ. தொலைவிற்கு உரிய அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் விளம்பரப் பலகைகள்கூட வைக்கமுடியாது. மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மைச் சான்று பெறவில்லை. மாநாட்டிற்கு வருபவர்களால் பெருமளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும். எனவே, ஆகஸ்ட் 20 அன்று அ.தி.மு.க. மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும். ”என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

மதுரையில் இபிஎஸ்-க்கு எதிராக சுவரொட்டிகள்

சில வாரங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒட்டிவந்தனர். இந்நிலையில் இன்று மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் பெயர்களில் மதுரை முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதனால் அ.தி.மு.க. மாநாடு மேலும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.