நாய்கள் 
தமிழ் நாடு

மீண்டும் நாய்க்கடி கொடூரம்... ஒரு மாதத்தில் 3ஆவது சம்பவம்!

Staff Writer

தமிழ்நாட்டின்தலைநகர் சென்னையில் கடந்த ஒரே மாதத்தில் பதிவான நாய்க்கடிக் கொடூரம் இன்று நிகழ்ந்துள்ளது. 

அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ராட்வெய்லர் போன்ற இன நாய்களை பலரும் வளர்த்துவருகின்றனர். மாநகராட்சி தரப்பில் இதை சரியாகக் கண்டு நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தப்படுவதில்லை. 

கடந்த மாதம் 5ஆம் தேதியன்று ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்ததில் அந்தச் சிறுமிக்கு முகம் கடுமையாக பாதிக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டது. 

அதையடுத்து சில நாள்களுக்கு முன்னர் அண்ணா நகர் பகுதியில் இதேபோல நாய் கடித்ததில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாள். அவருடைய தாயாரையும் நாய் கடிக்கப் பாய்ந்தது. நல்வாய்ப்பாக அவர் தப்பிவிட்டார். 

இந்த நிலையில், இன்று கொளத்தூர் பகுதியில் சாலையில் நடந்துசென்ற 12 வயது சிறுவனை இரண்டு நாய்கள் கடித்ததில், அவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

நகரில் தொடரும் இந்த அவலத்தை மாநகராட்சி எப்போது தடுத்து நிறுத்தும் என்கிற கேள்வி நீடிக்கிறது.