தயாநிதி மாறன் செய்தியாளர் சந்திப்பில் 
தமிழ் நாடு

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி அவதூறு வழக்கு... ஏன்?

Staff Writer

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மைய சென்னை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் தயாநிதி அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களவைத்தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம்கூட நான் பயன்படுத்தவில்லை என்று சென்னையில் தேர்தல் பரப்புரையின்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதற்கு எதிராக மறுப்பு தெரிவித்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பினேன். 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடுப்பதாகவும் தெரிவித்தேன். அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. அதனால் அவர் மீது இன்று சென்னை எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடுத்துள்ளேன். ” என்று கூறினார். 

மேலும், ” என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் 95 சதவீதத்துக்கும் மேல் செலவிட்டுள்ளேன். சுமார் 17 கோடி ரூபாய் எனக்கு ஒதுக்கப்பட்டது. கொரோனா காலத்தில் நிதி நிறுத்தப்பட்டது. மொத்த நிதியில் இப்போது 17 இலட்சம் ரூபாய்தான் மீதமிருக்கிறது.” என்றும் தயாநிதி கூறினார்.