தமிழக மீனவர் (கோப்புப் படம்)
தமிழ் நாடு

13 மீனவர் கைது - வழக்கம்போல முதல்வர் கடிதம்!

Staff Writer

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 

வங்கக் கடலில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்கள், IND-TN-08-MM-364, IND-TN-16-MM-2043 மற்றும் IND-TN-08-MM-1478 ஆகிய பதிவெண்கள் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (11-7-2024) கைது செய்யப்பட்டனர். 

வெளியுறவு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நம் நாட்டு மீனவர்கள், வரலாறு காணாத நெருக்கடியை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தற்போது 173 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் இதுபோன்று சிறைபிடிக்கப்படுவது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை வலுவான, ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கைவசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதிசெய்ய் வேண்டுமென்றும், 

இதுதொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டுமென்றும் தமிழ்நாட்டு முதலமைச்சர் தன் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.