விஜயகாந்த் இறுதிச் சடங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் 
தமிழ் நாடு

ஸ்டாலின், நிர்மலா இறுதி மரியாதை- விஜயகாந்த் உடல் அடக்கம்!

Staff Writer

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, தீவுத்திடலில் இன்று காலை முதல் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என். இரவி, மைய அரசின் சார்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட்ட திரையுலக பிரமுகர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அங்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சுமார் 3 மணிக்கு விஜயகாந்தின் உடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஏற்றப்பட்டு, அங்கிருந்து எழும்பூர், அமைந்தகரை, அண்ணா நகர், அரும்பாக்கம் வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தை அடைந்தது.

மெதுவாகச் சென்ற இறுதி ஊர்வலத்தில் சாலையின் இரு பக்கங்களிலும் நின்று தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் தங்களின் அபிமான நாயகனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கில் குடும்ப உறுப்பினர்களுடன் முக்கிய பிரமுகர்கள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். 72 குண்டுகள் முழங்கி அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.