வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் 
தமிழ் நாடு

பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கைது!

Staff Writer

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி சென்னை கொளத்தூரில் உள்ள பெருவள்ளூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் குறித்து வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பெருவள்ளூர் காவல்துறையினர், கபிலனை வியாசார்பாடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

இவரின் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்:

“வடசென்னை மேற்கு பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கபிலன் அவர்களைத் தமிழகக் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. திமுக அரசின் இந்த பாசிசப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதலமைச்சர், பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.

இது போன்ற அடக்குமுறைகளால், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியையோ, முதலமைச்சர் ஸ்டாலினின் கையாலாகாத்தனத்தையோ மறைக்க முடியாது. பாஜகவினர் மீதான இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள் முதலமைச்சரே. சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது உங்கள் நிர்வாகம்.” என்று கடுமையாக பதிவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram