என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் 
தமிழ் நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்வுகள்... என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி...

Staff Writer

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ஆம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ரவுடி திருவேங்கடம் ரெட்டேரி பகுதியில் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக விசாரணையில் கூறியதை அடுத்து, அவரை இன்று காலை 5.30 மணிக்கு மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, திருவேங்கடம் ஆயுதங்களால் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை வடக்கு காவல் கூடுதல் ஆணையர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்து ஜூலை 11ஆம் தேதி திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், இன்று திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.