மோடி- எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

மோடியின் பேச்சு ஏற்புடையது அல்ல- எடப்பாடி; கடும் கண்டனம்: ஜெயக்குமார்!

Staff Writer

பிரதமர் மோடியின் சர்ச்சைப் பேச்சுக்கு பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேசக் கருத்துகளை தேர்தலுக்காகப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

”பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும் வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.” என்றும் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அடுத்து அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் ஜெயக்குமாரிடம், எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் கண்டனம் எனும் வார்த்தைகூட இல்லையே; தயக்கமா என ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு, அவர், கண்டனம், கடும் கண்டனம் போதுமா என்று பதிலளித்தார்.