மு.க.ஸ்டாலின் - மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில் 
தமிழ் நாடு

“இறைநம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சி!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Staff Writer

“இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.

இந்து சமய அறநிலைத்துறையின் 1000 ஆவது கோயில் குடமுழுக்கு பெருவிழா மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின்பொறுப்பேற்று இன்றோடு 856 நாள்கள் ஆகும் நிலையில், இதுவரை 1000 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.

5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.

இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை.

இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இதற்குக் காரணமான இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபுவையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்! ” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற சனாதன மாநாட்டில் பங்கேற்றதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜகவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கடிதம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.