டெங்குகாய்ச்சலுக்கு உயிரிழந்த சிறுவன் 
தமிழ் நாடு

சென்னையில் டெங்குகாய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி!

Staff Writer

சென்னையில் டெங்குகாய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி சோனியா. இவர்களது மகன் ரக்சன் (வயது4) கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவனது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது சிறுவனுக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கடந்த 6ஆம் தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ரக்சனை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுவன் ரக்சன் பரிதாபமாக உயிரிழந்தான். டெங்குகாய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரவாயல் 144 வார்டில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவனுக்கு டெங்குகாய்ச்சல் ஏற்பட்டதாக அவனுடைய பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.