இலங்கை அகதிகள் 
தமிழ் நாடு

நீண்ட இடைவெளி... 3 இலங்கை அகதிகள்!

Staff Writer

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக வந்துள்ளனர். 

வட இலங்கை, மன்னார் மாவட்டம், தலைமன்னாரிலிருந்து ஒரு தாயாரும் அவரின் இரண்டு குழந்தைகளும் படகு மூலம் தனுஷ்கோடியை ஒட்டிய கடல் பகுதிக்கு வந்தனர். தத்தளித்த அவர்களை தமிழ்நாட்டின் கடல் காவல்துறையினர் மீட்டு கரைசேர்த்தனர். 

விசாரணையில் அவர்கள் 34 வயது யோகவள்ளி, அவரின் பிள்ளைகள் அனுஜா, விசால் ஆகியோர் என்பது தெரியவந்தது. 

அவர்கள் மன்னாரிலிருந்து படகு மூலம் வருவதற்கு இலங்கைப் பணம் 2.75 இலட்சம் ரூபாயைக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். 

நேற்று நள்ளிரவில் அவர்களை தமிழக கடல் காவல்துறையினர் மீட்டு அகதிகள் முகாமில்  ஒப்படைத்தனர். 

போர் முடிந்த இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்னர், பெரும் பொருளாதார நெருக்கடியும் வறுமையும் அதிகரித்தபோது, அன்றாடம் அங்கிருந்து தமிழ்க் குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தபடி இருந்தனர். கடந்த ஓராண்டாக அது குறைந்திருந்த நிலையில், மீண்டும் அகதிகளாக அடைக்கலம் கோரி இவர்கள் வந்துள்ளனர்.