பெற்றோரை இழந்த சோகத்தில் கோகிலாவும் அவரது இரண்டு சகோதரர்களும் 
தமிழ் நாடு

அனாதையான 3 குழந்தைகள்!

Staff Writer

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது வரை 47ஆக அதிகரித்துள்ள நிலையில், ஒரே தெருவில் 12 பேர் பலியாகியிருப்பது, ஒரே குடும்பத்தில் தாய் – தந்தை இருவரும் இறந்திருப்பது போன்ற செய்திகள் மனதை உலுக்குகின்றன.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த சுரேஷ் (42) பெயிண்டராக வேலை பார்த்து வந்தவர். இவருடைய மனைவி வடிவுக்கரசி (32). இவர்களுக்கு இவர்களுக்கு கோகிலா (16) என்ற மகளும், ஹரிஷ் (15), ராகவன் (12) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவர்கள் மூவரும், கடந்த புதன்கிழமை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று மாலை வீடு திரும்பியுள்ளர். அப்போது அவர்களுக்கு இடியாய் வந்துவிழுந்தது பெற்றோரின் இறப்புச் செய்தி.

கள்ளச்சாரம் குடித்த சுரேஷ் – வடிவுக்கரசி இருவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தாய் – தந்தையை இழந்து நிர்கதியாக நிற்கும் இந்த குழந்தைகளைப் பார்க்கையில் நெஞ்சம் பதறுகிறது.

கல்வி செலவு

கள்ளச் சாராயத்தால் பெற்றோர்களை இழந்த கோகிலா, ஹரிஷ், ராகவன் ஆகிய 3 குழந்தைகளின் கல்வி செலவை அ.தி.மு.க.வே ஏற்பதாகவும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.