தலைமைச்செயலகம் 
தமிழ் நாடு

26 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் கைதிகள் 12 பேர் விடுதலை!

Staff Writer

தமிழக சிறைகளில் பல்வேறு வழக்குகளில் 26 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 12 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13.9.2021 அன்று ஆற்றிய உரையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 113.ஆவது பிறந்த நாளான 15.9.2021 அன்று நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்து நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.

அதன்படி ஆயுள்தண்டனை பெற்று 10 முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களின் தண்டனைகளை குறைத்து, அவர்களை முன்விடுதலை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திட 11.1.2022 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரைப்படி, கடலூர் மத்திய சிறையிலிருந்து 4 கைதிகளும், கோவை மத்திய சிறையிலிருந்து 6 கைதிகளும், வேலூர் மத்திய சிறையிலிருந்து ஒரு கைதியும், சென்னை புழல் சிறையிலிருந்து ஒரு கைதியும், என மொத்தம் 12 ஆயுள் தண்டனை கைதிகளை நிபந்தனை அடிப்படையில் முன்விடுதலை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.