மீனவர்கள் (கோப்புப் படம்)
தமிழ் நாடு

எல்லைதாண்டிய இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!

Staff Writer

எல்லைதாண்டி இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

பாக் நீரிணைப் பகுதி அருகில் இராணி துர்காவதி எனும் கப்பலின் மூலம் இந்தியக் கடலோரக் காவல் படையினர் இன்று வழக்கமான சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோடியக்கரையிலிருந்து 15 கி.மீ. கடல் மைல் தொலைவில் இந்தியக் கடல் பகுதிக்குள் இலங்கையைச் சேர்ந்த 5 படகுகள் நடமாடியதை அவர்கள் பார்த்தனர். உடனே அந்தப் படகுகளை நோக்கி விரைந்தனர். 

அருகில் சென்று பார்த்தபோது அந்தப் படகுகளில் மீன்பிடிக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்தியக் கடல் பகுதிக்குள் எல்லைகடந்து மீன் பிடித்ததால் அவர்களைக் கடலோரப் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து நாகப்பட்டினத்துக்கு கூட்டிவந்தனர். அவர்கள் தமிழகக் காவல்துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.