பேரா. விக்கிரமபாகு கருணாரத்னே 
இலங்கை

மறைந்தார் விக்கிரமபாகு கருணாரத்னே!

Staff Writer

இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பேராசிரியருமான விக்கிரபாகு கருணாரத்னே காலமானார். 

அண்மைக் காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு உயிரிழ்ந்தார். அவருக்கு வயது 81. 

தென்கிழக்கு இலங்கையின் பதுளை மாவட்டத்தில் பிறந்த இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டத்தை முடித்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர், முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனேவுக்கு எதிரான நாடுதழுவிய போராட்டங்களில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டதுடன் வேலையிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். 

பல்வேறு முறை சிவிலியன் அமைப்புகளுடன் போராட்டங்களில் ஈடுபடுவதும், சிறைப்படுவதுமாக தொடர் செயற்பாடுகளில் இருந்துவந்தார். 

தொடக்கத்தில் இலங்கை சம சமாசக் கட்சியுடன் இணைந்து பணியாற்றியவர், கருத்துமாறுபாட்டால் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார போன்றவர்களுடன் நவ சம சமாசக் கட்சியைத் தோற்றுவித்து கடைசிவரை அதன் மூலமாகப் பணியாற்றிவந்தார். 

நாட்டில் ஒரு பக்கம் இனப்பிரச்னை எரிந்துகொண்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் ஒன்றுபட்ட இலங்கையின் எளிய மக்களுக்கான நீதிநியாயங்களுக்காகவும் பாடுபட்டவர், பேரா. கருணாரத்னே. இவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram