தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 
விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் : முதலில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

Staff Writer

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்றன. இதில், ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியா சார்பில் நீரஜ் ஜோப்ரா, டி.பி.மானு, கிஷோர் சேனா ஆகியோர் களம் கண்டனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய நீரஜ், தனது இரண்டாவது முயற்சியிலேயே 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம், 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.

நீரஜுக்குப் போட்டியாக பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் எறிந்து மிக அருகில் வந்தார். அவர் வெள்ளி பதக்கத்தையும் செக் குடியரசின் வீரர் ஜேகப் வட்லெஜ் வெண்கலப் பதக்கத்தையும் வசப்படுத்தினர்.

மேலும், ஒலிம்பிக், உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், டைமண்ட் லீக் என ஈட்டி எறிதலின் முக்கிய தொடர்கள் அனைத்திலும் தங்கம் வென்றவர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா.