வினேஷ் போகத் வெற்றி 
விளையாட்டு

மல்யுத்தம்: அரையிறுதிக்கு முன்னேறிய வினேஷ் போகத்!

Staff Writer

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் உக்ரைன் வீராங்கனையை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார். ஜப்பான் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினாலும், தொடர்ந்து போராடிய வினேஷ் போகத் 16-ஆவது சுற்றில் ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இது முக்கியமான வெற்றியாக கருதப்படுகிறது. காரணம் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ஜப்பானின் யு சுசாகியை இந்திய வீராங்கனை வீழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டின் ஒக்ஸானா லிவாஜை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்.

காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் வினேஷ் போகத். 29 வயதான அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டு குரல் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram