இந்திய - அமெரிக்க அணிகள் 
விளையாட்டு

ஸ்டாப் கிளாக் விதியால் 5 ரன் பெற்ற இந்திய அணி!

Staff Writer

இந்தியாவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ‘ஸ்டாப் கிளாக்’ விதிப்படி அமெரிக்காவுக்கு 5 ரன்கள் பெனால்டியாக விதிக்கப்பட்டது.

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா - வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.

இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா – அமெரிக்க அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அமெரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ்குமார் 27 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஸ்டாப் கிளாக் விதியால் 5 ரன் பெற்ற இந்திய அணி

இந்தப் போட்டியில் 3 முறை ஓவர்களை போடுவதற்கு அமெரிக்கா அணி தாமதம் செய்ததால் ‘ஸ்டாப் கிளாக்’ விதிப்படி எதிரணியான இந்தியாவுக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது.

16-வது ஓவரின் தொடக்கத்தில் இந்திய அணியின் ஸ்கோரில் 5 ரன்கள் சேர்க்கப்படுவதாக நடுவர் அறிவித்தார்.

இந்த விதியை கடந்த ஆண்டு டிசம்பர மாதம் ஐசிசி கொண்டு வந்தது. பந்துவீசுவதற்கான நேரத்தை கட்டுப்படுத்தும் விதி இது.

ஒரு ஓவர் வீசி முடித்த 60 நொடிக்குள் அடுத்த ஓவர் வீச வேண்டும். அவ்வாறு போட தவறும் பட்சத்தில் இரு முறை எச்சரிக்கை வழங்கப்படும். மூன்றாவது முறையும் இதே தவறை செய்தால் எதிரணியின் ஸ்கோரில் 5 ரன்கள் சேர்க்கப்படும்.