ஷர்மிளாவை சந்தித்துப் பேசும் கமல்ஹாசன்  
செய்திகள்

“பெண்கள் தரணி ஆளவருகையில், அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என விரும்புகிறேன்” – கமல்ஹாசன்

Staff Writer

கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் பரிசளித்தார்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் ஓட்டுநராக கடந்த மார்ச் மாதம் முதல் பணியாற்றி வந்தார்.

கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்பதால், கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார். பலரும் ஷர்மிளாவிற்கு நேரிலும் சமூக வலைதலங்களிலும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அரசியல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் ஷர்மிளா பணி செய்த பேருந்தில் பயணித்து நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பேருந்தின் உரிமையாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஷர்மிளா ஓட்டுநர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு மாருதி சுசூகி எர்டிகா காரை இன்று பரிசளித்தார். சென்னையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு ஓட்டுநர் ஷர்மிளாவை வரவழைத்த கமல்ஹாசன் அந்த காரை பரிசாக அளித்தார்.

இது தொடர்பாக கமல் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா.

பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார் அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.

தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.

கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.

ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.