இந்தியா

யமுனையில் புரண்டோடும் வெள்ளம்; டெல்லி மூழ்கியது!

Staff Writer

தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லி, அரியானா உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் கனமழையால் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹத்தினிகுண்ட் தடுப்பணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாவல், யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக டெல்லி யமுனை ஆற்றில் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக 205 மீட்டரை தாண்டிய வண்ணம் உள்ளது. 206 மீட்டரை தொட்டாலே அபாயம் கட்டத்தை தாண்டியதாகும். ஆனால் நேற்றிரவு 208.08 மீட்டரை எட்டியது. இதனால் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் ஆக்கிரிமிக்க தொடங்கியுள்ளது.

கடந்த 1978-ம் ஆண்டு நீர்மட்டம் 207.49 மீட்டருக்கு உயர்ந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது 45 வருடங்கள் கழித்து 208.08 மீட்டரை தாண்டியுள்ளது. மேலும், டெல்லியில் 208.08 மீட்டர் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்தது இதுவே முதல்முறையாகும். அபாயகரமான சூழ்நிலை நிலவுவதால், மக்கள் காத்திருக்க வேண்டாம். கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பள்ளிகளை தற்காலிக முகாமாக மாற்ற ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.