பிரதமர் மோடி 
இந்தியா

ஞாயிறு மாலை பதவியேற்பு- ஜனாதிபதியைச் சந்தித்தபின் மோடி தகவல்!

Staff Writer

நரேந்திர மோடி வரும் ஞாயிறன்று மாலை மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமர் பதவியில் அமரவுள்ளார். 

இரண்டாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடி, 18ஆவது மக்களவைத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தார். அவருடைய பா.ஜ.க. ஆட்சியமைக்கக்கூடிய அளவுக்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெறமுடியவில்லை. 

இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இன்றைய தில்லி கூட்டத்தில் அதன் தலைவராக மோடியைத் தேர்ந்தெடுத்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று மாலையில் குடியரசுத்தலைவர் முர்முவை அவரின் மாளிகையில் மோடி சந்தித்து, ஆட்சியமைக்க அனுமதி கோரினார். தன்னை ஆதரிக்கும் மக்களவை உறுப்பினர்களின் பட்டியலையும் அவர் குடியரசுத்தலைவரிடம் அளித்தார். 

அதை ஏற்றுக்கொண்ட அரசுத்தலைவர் முர்மு, மோடியைப் பதவியேற்க அழைப்புவிடுத்தார். 

பின்னர் வெளியே வந்ந்த நரேந்திர மோடி குடியரசுத்தலைவர் மாளிகையில் பேசினார். அப்போது, தன்னுடைய ஆட்சியைப் பற்றி பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், அதே ஊக்கத்துடன் மூன்றாம் முறையும் பணியாற்றும் என்று கூறினார். 

வரும் ஞாயிறன்று இரவு 7.15 மணியளவில் தன் அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.