நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டு சட்ட வரைவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வியாழன் அன்று ஒப்புதல் வழங்கினார்.
அதையடுத்து நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு இடங்கள் வழங்குவது முறைப்படி சட்டம் ஆகியுள்ளது. இது அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும். இது இனிமேல் அரசமைப்புச்சட்டத்தின் 106ஆவது திருத்தச்சட்டம் என்று அறியப்படும்.
இப்போது சட்டமாகியுள்ளபோதும், வரும் 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு அதன்பிறகே பெண்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். இதைத்தான் காங்கிரஸ் உட்பட்ட எதிர்க்கட்சிகள் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின.ஆனால் அரசுத் தரப்பில் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.