இரகுவர் தாஸ், இந்திர சேனா ரெட்டி 
இந்தியா

அதிருப்தியில் இருந்த பா.ஜ.க. தலைவர் ஆளுநராக நியமனம்!

Staff Writer

திரிபுரா, ஒடிசா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உத்தரவு வெளியிட்டார்.

தெலங்கானா மாநில பா.ஜ.க. செயலாளர் இந்திர சேனா ரெட்டி நல்லு திரிபுரா ஆளுநராகவும், ஜார்க்கண்டு மாநில முன்னாள் முதலமைச்சர் இரகுவர்தாஸ் ஒடிசா ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் பதவியேற்றுக்கொள்ளும் நாளிலிருந்து அவர்களின் நியமனம் நடைமுறைக்கு வரும் என குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் தேசிய துணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கும் 68 வயது இரகுவர்தாஸ், 2014ஆம் ஆண்டு முதல் 2019வரை ஜார்க்கண்டு முதலமைச்சராக இருந்தார். முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டி ஜார்க்கண்டு மாநில பா.ஜ.க. தலைவராகப் பதவியேற்றதை அடுத்து இரகுவர்தாசுக்கு இந்தப் பதவி கிடைத்துள்ளது. அண்மைக்காலமாகவே தாஸ் கட்சியில் மூத்தவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் புதிதாக வருபவர்களுக்கே முன்னிலை அளிக்கப்படுவதாக அதிருப்தியில் இருந்துவந்தார்.