மாதிரிப் படம் 
இந்தியா

துபாய் அழைத்துச் செல்லாத கணவன்... ஒரே குத்தில் காலி செய்த மனைவி!

Staff Writer

கணவன்மார்களே உஷார் என்று எச்சரிக்கை தருகிறது, இந்த சம்பவம். அப்படி என்ன சம்பவம் என்று மூக்கின்மேல் விரலை வைத்து யோசிக்க வேண்டாம்.

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள வானவ்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் நிகில் கண்ணா (வயது 36), ரேணுகா (வயது 38) தம்பதியர். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், அங்குள்ள ஆடம்பரமான குடியிருப்பில் வசதியாக வாழ்ந்துவந்தனர்.

நிகில் கண்ணா, கட்டுமானம்சார்ந்த தொழில் அதிபர். தன்னுடைய பிறந்தநாளை துபாயில் கொண்டாடுவதற்கு அழைத்துச் செல்லுமாறு நிகிலிடம் கூறியுள்ளார் ரேணுகா. நிகிலோ ரேணுகாவை அவர் கூறிய நாளுக்குள் அழைத்துச் செல்லாமல் இருந்திருக்கிறார். ரேணுகாவின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த பரிசுகளை காதல் கணவர் வாங்கித்தரவில்லை என்றும் அவருக்கு கோபம்! இதனால், கணவர் மீது கோபம் கொண்ட ரேணுக நேற்று மதியம் நிகிலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சண்டையின்போது ரேணுகா, நிகிலின் மூக்கில் குத்தியுள்ளார். இதில் நிகிலின் மூக்கும் சில பற்களும் உடைந்துள்ளன. நிகிலுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், அவர் சுயநினைவை இழந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, முதல்கட்ட விசாரணை நடத்திய காவல் துறையினர் ரேணுகா மீது இ.கு.ச. 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.