வந்தே பாரத் ரயில் சேவை  
இந்தியா

திருநெல்வேலி - சென்னை: வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்!

Staff Writer

திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்திய ரயில்வே சார்பில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் இந்தியா முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் சேவையை மேம்படுத்தும் வகையில், 9 வந்தே பாரத் விரைவு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கா், திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சா.ஞானதிரவியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவையானது திங்கள்கிழமை முதலே தொடங்குகிறது. இதன் முதல் பயணிகள் சேவை சென்னை எழும்பூரில் இருந்து திங்கள்கிழமை பிற்பகல் 2.50 மணிக்குத் தொடங்குகிறது. இந்த ரயிலானது திங்கள்கிழமை இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் சேவை செவ்வாய்க்கிழமை கிடையாது.

இந்த ரயிலானது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வதற்கு சாதாரண ஏசி பெட்டிக்கு ரூ.1665, எக்ஸிகியூட்டிவ் பெட்டிக்கு ரூ.3,055 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.