தெலங்கானா: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்க நிகழ்வு 
இந்தியா

10ஆம் வகுப்புவரை காலை உணவு: தெலங்கானாவில் தொடக்கம்!

Staff Writer

தெலங்கானாவில் 10ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தெலங்கானாவிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

சுமார் ரூ.400 கோடி செலவிலான இந்தத் திட்டத்தால், 67,147 அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 23 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று தெலங்கானா அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும்.

காலை உணவாக இட்லி, சாம்பார், கோதுமை ரவா, உப்புமா, சட்னி, பூரி உருளைக்கிழங்கு, குருமா, தக்காளி சாதம், கிச்சடி, பொங்கல் ஆகியவை வழங்கப்படும்.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதின் மூலம், அவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்று தெலங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது.