நீட் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண் எடுத்து மாணவி ஒருவர், +2 தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். அதுமட்டுமல்ல மறுதேர்விலும் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவர் கல்லூரி சேர முடியாது.
அண்மையில், மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘எனக்கு தெரிந்த குஜராத் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண்தான் பெற்றார். அகமதிப்பீட்டில் (இன்டர்னல்) பெற்ற 20 மதிப்பெண்களையும் சேர்த்து 21 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார். ஆனால், இப்போது நீட் தேர்வில் அந்த மாணவி 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.” என அவர் கூறியிருந்தார்.
இதேமாதிரி மற்றொரு சம்பவம் அதே குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.
பின்னர் ஜூன் மாதம் நடந்த மறு தேர்வை எழுதினார். இதில், வேதியியல் பாடத்தில் மட்டுமே தேர்ச்சி். இயற்பியலில் தோல்வி அடைந்தார்.
என்னதான் குஜராத் மாணவி நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண் எடுத்திருந்திருந்தாலும் தற்போது +2 தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவரால் கல்லூரி சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது எப்படி நடந்திருக்கும் என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாடங்களைப் படிக்காமலேயே நீட் தேர்வில் இவ்வளவு மார்க் எடுக்கமுடியுமா? எங்கேயோ தப்பு நடக்கிறது... கண்டு பிடிங்க ஆபீஸர்!