திருமணம் தாண்டிய உறவு (மாதிரிப்படம்) 
இந்தியா

கான்ஸ்டபிள் ஆக்கப்பட்ட டி.எஸ்.பி.! - இது என்ன கூத்து?

Staff Writer

திருமணம் தாண்டிய உறவிலிருந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, இணைக் கணிப்பாளராக இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் காவலராகப் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிருபா சங்கர் கனௌஜியா என்பவர், உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் காவல்துறை இணைக் கண்காணிப்பாளராக இருந்தார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலையில் குடும்ப காரணங்களை சுட்டிக்காட்டி விடுப்பு எடுத்திருந்தார்.

ஆனால், விடுப்பு எடுத்த கிருபா சங்கர் வீட்டிற்கு செல்லாமல் வேறொரு பெண் காவலருடன் கான்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். விடுதிக்கு சென்றபின், தன்னுடைய மொபைல் போனை அணைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை யாராலும் தொடர்புகொள்ல முடியவில்லை.

இந்த நிலையில், கிருபா சங்கரின் மனைவி, தன்னுடைய கணவர் திடீரென காணாமல் போய்விட்டதாக அவர் பணிபுரிந்த காவல்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கிருபா சங்கரின் மொபைல் சிக்னல் கடைசியாக கான்பூரிலுள்ள ஒரு விடுதியருகே காட்டுவதை கண்டறிந்தனர். அதன்பின்னர், சிக்னல் காட்டப்பட்ட விடுதிக்கு சென்று, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் கிருபா சங்கரும், ஒரு பெண் காவலரும் ஒன்றாக விடுதிக்குள் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த விடுதியில் தங்கியிருந்த கிருபா சங்கரும், அவருடன் இருந்த பெண் காவலரையும் அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையில் பணிபுரியும் இருவரும், தகாத உறவில் இருப்பதாக காவல்துறை மேலிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, காவல்துறை இணை ஆணையராக இருந்த கிருபா சங்கர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவல்துறை இணை ஆணையராக இருந்த கிருபா சங்கர் காவலராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.