பிரதமர் மோடி 
இந்தியா

எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்; பதிலளிக்கிறார் பிரதமர்!

Staff Writer

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 8-ஆம் தேதி முதல் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்கக் கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாள் தொடர்ந்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 8-வது நாளாக நேற்று வரை முடங்கியது.

முன்னதாக, ஜூலை 26 ஆம் தேதி மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி. கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் வழங்கினார். அவருடன் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மக்களவைத் தலைவர் நாகேஸ்வர் ராவும் தனியாக ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரிப்பதாகத் தெரிவித்தன.

 மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் அறிவித்ததோடு விவாதத்துக்கான நாளை பின்னர் அறிவிப்பதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.